×

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனி மற்றும் தீவிரவாத அமைப்புகள் பெயரிலும் இந்தியா உள்ளது: எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனி மற்றும் இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயரிலும் கூட இந்தியா உள்ளது. எனவே இந்தியா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என 26 எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கூறியதாவது:இந்தியாவிலும், இந்தியா குறித்தும் புதிய விடியல் பிறந்திருக்கிறது. உலகளவில் நம் நாட்டைப் பற்றி நம்பிக்கை கொள்கின்றனர். ஒன்றிய பாஜ ஆட்சியில் இந்திய பொருளாதாரம் உலகளவில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சியை பிடிக்கும் போது, நமது நாட்டின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். எனவே, கட்சியினர் அனைவரும் உறுதியுடன் பணியாற்ற வேண்டும். தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற, வழிதெரியாத, ஓய்ந்து போன, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை திட்டத்தை மட்டும் கொண்டுள்ள கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. அவர்கள் தங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ பெயரை பயன்படுத்தி உள்ளனர். நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனியிலும் இந்தியா பெயர் உள்ளது. பிஎப்ஐ, இந்தியன் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் பெயரிலும் இந்தியா உள்ளது. நாட்டை ஆளவும், உடைக்கவும் விரும்பும் அமைப்புகள், இந்தியா, இந்தியன் போன்ற பெயர்களை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தப் பார்க்கின்றன.

எனவே பெயரில் மட்டும் இந்தியாவை வைத்துக் கொள்வதால் எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு கூட ஆங்கிலேயரான ஏ ஓ ஹியூம் தான் பெயரிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனாலும் மக்கள் இப்போது முதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற பெயர்களால் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. அவர்கள் மிகவும் பொறுப்பற்றவர்களாக மாறிவிட்டனர். அவர்களின் நடத்தை இன்னும் நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்து விட்டதை காட்டுகிறது. எனவே பாஜ எம்பிக்கள் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

The post ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனி மற்றும் தீவிரவாத அமைப்புகள் பெயரிலும் இந்தியா உள்ளது: எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,British East India Company ,PM Modi ,New Delhi ,Indian Mujahideen ,Modi ,Alliance ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...